கல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் அதிகார போட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 21, 2018

Comments:0

கல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் அதிகார போட்டி



தொடக்கப் பள்ளியில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தால், அதிகார மையங்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. யாருடைய பேச்சை கேட்பது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். தமிழக அரசு, கற்றல், கற்பித்தல் மற்றும் பாடத் திட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், ஆசிரியர்கள் இடமாறுதல், பணி நியமனம், பயிற்சி மற்றும் கல்வித் துறையின் இடமாறுதல்களிலும், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், இரண்டு நாட்களுக்கு முன், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குளறுபடி

'நிர்வாக முறையை நீண்ட சுற்றலில் விடும் வகையில், புதிய அரசாணை அமைந்துள்ளது. இதனால், நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்படும்' என, அதிகாரிகள் மட்டத்திலும், ஆசிரியர் சங்கங்கள் மத்தியிலும் அதிர்ச்சியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. 

புதிய அரசாணைப்படி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு தனியாக, மாவட்ட அதிகாரிகள் செயல்பட மாட்டார்கள். 

தற்போது, இந்த பணியில் உள்ள அதிகாரிகள், அனைத்து பள்ளிகளுக்கான மாவட்ட அதிகாரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளைப் போல், தங்களுக்கு வழங்கப்படும் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அனைத்து வகை பள்ளிகளையும், கவனிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடுத்து தற்போது செயல்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். உதவி அதிகாரிகள் அனைவரும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கட்டளைப்படி செயல்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய அரசாணையால், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் ஆகியோருக்கான அதிகாரங்கள், தானாகவே குறைகின்றன. இதுவரை, தலைமையகத்தில் உள்ள, இணை இயக்குனர்கள் மேற்கொண்டு வந்த, பல நிர்வாக பணிகள், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால், இணை இயக்குனர்களுக்கு இனி என்ன வேலை என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

பணிச்சுமை

அதேபோல், தற்போதுள்ள நிலை மாற்றப்பட்டதால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம் கூடுதலாக வழங்கப்பட்டதுடன், பணிச்சுமையும் அதிகரித்துள்ளது.

 இதுவரை, பள்ளிக்கல்வி இயக்குனரின் கட்ட ளைப்படி செயல்பட்ட, சி.இ.ஓ.,க்கள், இனி தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரின் உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டும்.  இந்த உத்தரவால், மாவட்ட வாரியாக பள்ளிகளின் நிர்வாக பணிகளில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர், ஒரு வகையான உத்தரவும், மற்ற இயக்குனர்கள் இன்னொரு வகையான உத்தரவும் பிறப்பித்தால், அவற்றில், எதை செயல்படுத்துவது என்பதில், சி.இ.ஓ.,க்கள், திணறுவர்.

'இதுவரை, தனி இயக்குனரகம் அமைத்து, தெளிவாக நிர்வாகம் நடந்தது.

தற்போது, அனைத்தையும் இணைத்து, குழப்பம் ஏற்படுத்தியிருப்பது ஏன் என, தெரியவில்லை' என, ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இந்த திட்டத்தின் வழியே, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் அதிகாரத்தை பயன்படுத்தி, நிர்வாகத்தில் நேரடியாக தலையிட, அரசியல் கட்சியினர் முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், இந்த அரசாணையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews