திருப்பூர் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுப்பதாக புகார் - நடப்பது என்ன?
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், கூடுதலாக சேர வரும் மாணவர்களை பள்ளியில் சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 965 அரசு தொடக்கப் பள்ளிகள், 264 நடுநிலைப் பள்ளிகள், 89 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 95 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,413 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 633 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதுதவிர மேல்நிலை வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பெற்றோர் கூறியது:
திருப்பூர் மாநகரில் கே.எஸ்.சி அரசு மேல்நிலைப்பள்ளி, குமார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக வரும் மாணவ, மாணவிகளையும், பெற்றோரையும் அலைக்கழிக்கின்றனர். மாணவர்கள் அதிகளவில் சேர்ந்துவிட்டதாகவும், உங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்குமாறும் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்துகிறது.
9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களில் மாணவர்களை சேர்க்க முடியாத நிலையுள்ளது. இதனால் மாணவர்கள், பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு கடிதம் வாயிலாக புகார் அனுப்பி உள்ளோம் என்றனர்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) காளிமுத்து தலைமையில் பள்ளி துணை ஆய்வாளர்கள் ரவி, ராஜசேகர், கலைமணி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். எந்த மாணவரையும் திருப்பி அனுப்பாமல், அனைவரையும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையின்போது, பெற்றோரிடம் நன்கொடை எதுவும் பெறக்கூடாது. பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் செலுத்திய கட்டணத்துக்கு, கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். மதிப்பெண் குறைவாக இருப்பதை காரணம் காட்டி, அரசுப்பள்ளிகளே மாணவர்களை வெளியேற்றினால், அவர்கள் படிக்க முடியாமல், பாதை மாற வாய்ப்புகள் உள்ளன. எனவே, குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகளை அரசுப் பள்ளிகள் உருவாக்கித் தர வேண்டும் என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) காளிமுத்து அறிவுறுத்தியுள்ளார்” என்றனர்.
Search This Blog
Friday, June 06, 2025
Comments:0
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுப்பதாக புகார் - நடப்பது என்ன?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.