TET தேர்வு நிலைப்பாட்டில் தமிழக அரசு இரட்டை வேடம்: சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 07, 2025

Comments:0

TET தேர்வு நிலைப்பாட்டில் தமிழக அரசு இரட்டை வேடம்: சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி



TET தேர்வு நிலைப்பாட்டில் தமிழக அரசு இரட்டை வேடம்: சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி

"ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.) குறித்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது," என சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் கீழ் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு டி.இ.டி. (TET) தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் (மைனாரிட்டி) பள்ளிகள் TET விலக்கு பெற்றிருந்தன.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு டி.இ.டி. தேவை என உத்தரவு வழங்கப்பட்டது. இதில், சிறுபான்மையினர் பள்ளிகள் விலக்கு பெறும் வகையில் தனியாக வகைப்படுத்தப்பட்டன. பதவி உயர்வுக்கு டி.இ.டி. கட்டாயமாக்கப்பட்டதால், பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டது. சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அப்போது, தமிழக அரசு சார்பில் “ஆசிரியர் பதவி உயர்வுக்கு டி.இ.டி. தேவையில்லை; அது பணி நியமனங்களுக்கு மட்டுமே உண்டு” என மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குகள் நீடித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நிறுத்தப்பட்டிருந்தது.

ஆசிரியர் சங்கங்கள் நடத்திய போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன் பின்னர், தமிழக அரசு தானாகவே மேல்முறையீட்டை திரும்ப பெற்றது.

இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த மற்றொரு வழக்கில், உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் உட்பட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் டி.இ.டி. தேர்வு கட்டாயம் என உத்தரவு வழங்கப்பட்டது.

இதனால் இதுவரை டி.இ.டி. விலக்கு பெற்றிருந்த சிறுபான்மையினர் பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்கள் சந்தேகத்திற்குள்ளாகி உள்ளது. தொடரும் குழப்பங்கள்

இதைப் பற்றி தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு செயல் தலைவர் கனகராஜ் கூறியதாவது:

> "இவ்விஷயத்தில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடு, உயர்நீதிமன்றத்தில் வேறு ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளது. மேல்முறையீட்டை திரும்ப பெற்ற பிறகும், அதனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு தெளிவாக வழிகாட்டவில்லை.

> இதனால், மேல்முறையீட்டிற்கு முந்தைய நிலையைத் தொடர்ந்து கல்வித்துறை செயல்பட்டது. அதேபோல், மதுரை உயர்நீதிமன்ற வழக்கிலும் அதிகாரிகள் அந்த நிலைப்பாட்டையே பின்பற்றினர்.

> அரசின் இரட்டை வேட நிலைப்பாட்டால், சிறுபான்மையினர் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன," எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84657107