தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஒரு இடத்துக்கு 7 மாணவர்கள் போட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 31, 2024

Comments:0

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஒரு இடத்துக்கு 7 மாணவர்கள் போட்டி



தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஒரு இடத்துக்கு 7 மாணவர்கள் போட்டி

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், சென்னை கே.கே.நகரில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி ஆகியவை உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 250 பிடிஎஸ் இடங்களில் இருந்து 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இருந்து 50 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளது. எஞ்சியுள்ள 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.

தமிழகத்தில் மொத்தம் 11,500 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்களில் மட்டும், மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கான (இடபிள்யூஎஸ்) இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதேபோல, அரசு ஒதுக்கீட்டுக்கான மொத்த இடங்களில் 7.5 சதவீதம், தமிழக அரசு கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. அரசு, தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர்சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் https://tnmedicalselection.net மற்றும் https://tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்வி மாணவர் தேர்வு குழு செயலர் பி.அருணலதாவிடம் கேட்டபோது, ‘‘எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஜூலை 31-ம் தேதி (இன்று) முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. அங்கு முதல் சுற்று முடிந்ததும், தமிழகத்தில் முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கும்’’ என்றார். தமிழகத்தில் 1,52,920 பேர் நீட் தேர்வு எழுதியதில், 89,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 11,500 மருத்துவ இடங்கள் உள்ள நிலையில், ஒரு இடத்துக்கு 7 பேர் போட்டியில் உள்ளனர்.

அகில இந்திய கலந்தாய்வு ஆக.14-ல் தொடங்குகிறது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ம் தேதி ஆன்லைனில் தொடங்க உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்துகிறது.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்குகிறது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் இணையதளத்தில் ஆகஸ்ட் 14 முதல் 20-ம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும். 21-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை கட்டணம் செலுத்தலாம். 16-ம் தேதி முதல் 20-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம்.

தரவரிசை பட்டியல் அடிப்படையில் 21, 22-ம்தேதிகளில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். 2-ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 5-ம் தேதியும், 3-ம் சுற்று கலந்தாய்வுசெப்டம்பர் 26-ம் தேதியும், மூன்று சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு அக்டோபர் 16-ம் தேதியும் தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews