Breaking

Friday, July 01, 2022

’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பசுமைவழி சாலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 350 மாணவர்களுக்கு தலா ரூ.3,000 கல்வி ஊக்கத்தொகை மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது நம் முதலமைச்சர் ஸ்டாலின் தான். கல்விக்கு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள், உயர்கல்வியைத் தொடருகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டியது ஓர் அரசின் கடமை.

ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்த உடன், கல்விக்காக சில திட்டங்களை கொண்டுவருவது வழக்கம் தான். ஆனால், கடந்த ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.75,000 கடனை வைத்துவிட்டுச் சென்றனர். இருந்த போதும், கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் பள்ளிக்கல்விக்காக ரூ.38,000 கோடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். கல்வி வளர்ச்சிக்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டம், எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் உட்பட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகள் மீது அதிக கவனம் செலுத்திவருவதன் காரணமாக, நடப்பு கல்வியாண்டில் 9 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருப்பதாகவும் இதற்கு காரணம் அரசின் திட்டங்கள் தான். குழந்தைகளை யாருடனும் ஒப்பீடு செய்யக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கென்று தனித்திறமை உண்டு அத்தனித்திறனை அடையாளம் கண்டு அதை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

எத்தனை மார்க் வாங்கினாலும், பிள்ளைகளை கொண்டாடிப் பழக வேண்டும் பெற்றோர்களுக்கு அறிவுரையும் வழங்கினார். கல்வித்துறையின் பொற்காலமாக ஸ்டாலினின் ஆட்சி இருந்துவருகிறது” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வேலு, கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog