கடந்த 2019 டிசம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவில் உள்ள அய்யனார்பள்ளி கிராம பஞ்சாயத்து தலைவராக லட்சுமி நாகசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பழங்குடியின வகுப்பினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த கிராம பஞ்சாயத்தில், பிற்படுத்தப்பட்ட வக்காலிகர் பிரிவை சேர்ந்த லட்சுமி நாகசங்கர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர் என்று போலியாக சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டதாகக் கூறி, நிர்குணா என்பவர் புகார் அளித்தார். கடந்த ஜனவரி முதல் இந்த புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க கோரி நிர்குணா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லட்சுமி நாகசங்கர், பழங்குடியினர் என போலி சான்று பெற்று தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. தேர்தல், கல்வி, வேலைவாய்ப்புகளில், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டை, தகுதியில்லாத பிற வகுப்பைச் சேர்ந்தவர்கள் தட்டிப்பறித்து வருகிறார்கள். இதன் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
இதை தடுக்க, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான சாதிச் சான்றுகள், இருப்பிட சான்று, வருவாய் சான்றுகளை வழங்க தாலுகா அளவில் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். இந்த யோசனை குறித்து தமிழக வருவாய்துறை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும். அதற்காக இந்த வழக்கில் வருவாய் துறை செயலாளரை இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்க்கிறது. இந்த வழக்கில் லட்சுமி நாகசங்கர் தான் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்தான் என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Monday, June 28, 2021
கல்வி, வேலைவாய்ப்பில் எஸ்.சி, எஸ்.டி மக்களின் உரிமைகள் மற்ற பிரிவினரால் தட்டி பறிப்பு: ஐகோர்ட் கடும் அதிருப்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.