அங்கீகாரமில்லாத மனைகளின் மறுவிற்பனையை பதிவு செய்த, சார் பதிவாளர்களின் பதவி உயர்வை நிறுத்தி வைக்க, பதிவுத் துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு, விண்ணப்பிக்கும் அவகாசம், 2018 நவம்பர், 3ல் முடிந்தது. அதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, நகர், ஊரமைப்புத் துறை வாயிலாக நடந்து வருகிறது. வரன்முறை திட்டம் அறிவிக்கப்பட்ட போது, 2016 அக்., 20க்கு முன், ஒரு முறையாவது , வீட்டு மனையாக பதிவு செய்த மனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த விலக்கு சலுகை நிரந்தரமானதா, குறிப்பிட்ட அவகாசத்துக்கு உட்பட்டதா என்பதை நகர், ஊரமைப்புத் துறையும், பதிவுத்துறையும் தெளிவுபடுத்தவில்லை. இதனால், வரன்முறைக்கு விண்ணப்பிக்காத மனைகளின், மறு விற்பனை தொடர்பான பத்திரங்களை, சார் பதிவாளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம் முடிந்த நிலையில், மனைகள் மறுவிற்பனை பத்திரங்களை பதிவு செய்ய கூடாது என, நகர் ஊரமைப்புத் துறை, பதிவுத்துறைக்கு கடிதம் எழுதியது.
இதன் அடிப்படையில், மனை மறுவிற்பனை பத்திரங்களை பதிவு செய்த சார் பதிவாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, பதிவுத் துறை முடிவு செய்துள்ளது.பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நகர், ஊரமைப்புத் துறை ஆட்சேபம் தெரிவித்தும், மனைகள் மறுவிற்பனை பத்திரங்களை பதிவு செய்த, சார் பதிவாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இவர்கள் மீது, பதவி உயர்வை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட, ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும் பணிகள் துவங்கி உள்ளன.இவ்வாறு பதிவான பத்திரங்களை என்ன செய்வது என்பது குறித்து, சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U