Breaking

Wednesday, March 11, 2026

தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது: சென்னை ஐஐடி சார்பில் வழங்கப்பட்டது



தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது: சென்னை ஐஐடி சார்பில் வழங்கப்பட்டது

தேசிய அளவில் சிறந்த பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு சென்னை ஐஐடி விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை நல்ல முறையில் பயிற்றுவித்து, அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்கள் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பாகப் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னை ஐஐடி தேசிய அளவில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

கடந்த ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த விருது, ‘முதல் கொள்கைகள் ஆசிரியர் விருது’ என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான ஐஐடி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 ஆசிரியர்களுக்கு ஐஐடி இயக்குநர் காமகோடி நேற்று விருது வழங்கினார். அவர் வாழ்த்திப் பேசும்போது, “ஒரு மாணவரின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பள்ளி ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்களால்தான் மாணவர்களின் சிந்தனையையும் கற்றலையும் மேம்படுத்த முடியும்.

இத்தகைய உயர் பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. அந்த வகையில் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி ஐஐடி கவுரவிக்கிறது.

இந்த விருது மற்ற ஆசிரியர்களுக்கும் உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்று நம்புகிறோம். இதன்மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும். தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வலியுறுத்தப்பட்டுள்ளபடி நம் நாட்டில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, டீன் (கல்வி) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் பேசும்போது, “அடிப்படை அறிவியல் புரிதலுடன் ஐஐடியில் சேரும் மாணவர்கள் உயர் கல்வியிலும் வேலையிலும் சிறந்து விளங்குகிறார்கள். மாணவர்கள் சரியான வழியில் படித்தால் அறிவியல், பொறியியல் படிப்புகள் மிகவும் உற்சாகம் அளிக்கும்'' என்றார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog