பிஆர்க் படிப்புக்கான ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு
பிஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 2 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நம் நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவுகளாக நடைபெறும்.
இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான 2-ம் தாள் தேர்வு ஜன.30-ம் தேதி நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இத்தேர்வில் மகாராஷ்டிரா மாநில மாணவர் பேட்னி நீல் சந்தேஷ் (பி.ஆர்க்), மத்திய பிர தேசத்தைச் சேர்ந்த சுனிதி சிங் (பி.பிளானிங்) ஆகியோர் தேசிய அளவில் முழு மதிப்பெண் பெற்ற சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாணவி ஜி.அதிதி (பி.ஆர்க்) 99.98 சதவீதமும், மாணவர் ராகுல் கண்ணன் (பி.பிளானிங்) 99.83 சதவீதமும் மதிப்பெண் எடுத்து முன்னிலை வகிக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.