இருக்கும் கல்வி நிலையங்களை முதலில் காப்பாற்றுங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 22, 2021

Comments:0

இருக்கும் கல்வி நிலையங்களை முதலில் காப்பாற்றுங்கள்

தமிழ் மொழிக்கு என, தனி மொழியியல் பல்கலைக் கழகத்தை, தமிழக அரசு துவங்க வேண்டும் என, சமீபத்தில் ஓர் அரசியல் தலைவர், தமிழக அரசை கேட்டுக் கொண்டார். அந்த பல்கலைக் கழகத்திற்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே பல பல்கலைக் கழகங்களும், மொழியியல் கல்வி நிலையங்களும் தள்ளாடும் நிலையில், புதிதாக ஒன்று வேண்டாம் என்பது தான் என் போன்ற கல்வியாளர்களின் கருத்து.ஏற்கனவே பல்வேறு காரணங்களாலும், சிலரை திருப்திபடுத்துவதற்காகவும் பெயரளவுக்கு துவக்கப்பட்ட கல்வி நிலையங்கள் பல, வெறும் கட்டடங்களாகவும், அறைகலன்கள் நிறைந்தும் உள்ள நிலையில், கூடுதலாக ஒரு கல்வி நிலையம் வேண்டாமே என்பது தான் என் போன்றவர்களின் எண்ணம்.
சிறப்பாக அமையும்

புதிதாக ஒரு கல்வி நிலையத்தை துவக்குவதற்கு பதில், மொழியியல் பல்கலைக் கழகத்துடன், மொழி தொடர்பான சில துறைகளையும் கவனத்தில் கொண்டால் சிறப்பாக அமையும். மேலும், இந்திய அளவில், பல மாநிலங்களில், பல நிலைகளில் தமிழ் மொழிக்கான பல துறைகள், இருக்கைகள் முடங்கி உள்ளன. இவற்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

Term Life Insurance Plans குறிப்பாக, சென்னை பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த, தமிழ் தொடர்பான மொழியியல் ஆய்வுப் பிரிவு மற்றும் ஆய்வகம், அகராதி திருத்தப் பணி, திருக்குறள், கிறிஸ்துவ ஆய்விருக்கைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பணியாற்றிய பணியாளர்கள், சம்பந்தமே இல்லாத பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர் அல்லது பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதுபோல, சென்னை பல்கலைக் கழகத்தில் முடக்கப்பட்டுள்ள மொழியியல் பிரிவு, மற்ற ஆய்வுக்கூடத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். திருவாரூர் நடுவண் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் போன்றவற்றில் மொழியியல் துறைகள் இல்லை; அங்கு உருவாக்கப்பட வேண்டும். அண்ணாமலை பல்கலைக் கழக மொழியியல் அறிஞர்களான ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம், க.பாலசுப்பிரமணியன், பொன்.கோதண்டராமன், ந.தெய்வசுந்தரம் போன்ற தலைசிறந்த மொழியியல் அறிஞர்களைக் கொண்டது தமிழகம். தற்போது, திறமையான பேராசிரியர்கள் மற்றும் மொழியியல் அறிஞர்களின் குறைபாடுகளால் அண்ணாமலை, மதுரை, கோவை, தஞ்சாவூர் பல்கலைக் கழகங்களில் உள்ள மொழியியல் துறைகள் தள்ளாடுகின்றன; அவற்றை முதலில் வலுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே நல்ல கட்டமைப்பில் உள்ள, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மொழிபெயர்ப்புத் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம், பாவாணர் அகரமுதலித் திட்டம்.

தேவையான நடவடிக்கை
மேலும், தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆகிய துறைகளில், மொழியியல் ஆய்வாளர்கள் உரிய நிலைகளில் நியமிக்கப்பட வேண்டும். இப்படி அமைப்புகள் இருக்கின்றன என்பதே பலருக்கும் தெரியாத நிலையில் இவை பதுங்கிக் கொண்டிருக்கின்றன.எல்லாவற்றிலும் தமிழ், எதற்கும் தமிழ் என முழங்கும் தமிழக அரசு, இந்த நிறுவனங்களை புனரமைக்கலாம். அவற்றில் போதிய மாணவர்களை சேர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இது மட்டும் போதாது.தமிழகத்தில் இளங்கலை, முதுகலை தமிழ் பட்டப் படிப்புகளில் மட்டுமல்லாமல், ஆங்கிலம் போன்ற பிற மொழி துறைகளிலும், மொழியியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

ஊக்கம் அளிக்கலாம்

மொழி தொடர்பான அரசு மற்றும் தனியார் அமைப்புகளில், மொழியியல் பேராசிரியர்கள் மற்றும் வல்லுனர்களை இணைக்க வேண்டும்.மொழிக் கல்வி, அகராதியியல், மொழிபெயர்ப்பியல், கணினி மொழியியல் போன்ற துறைகளில் மொழியியல் ஆய்வாளர்கள் இடம் பெற வேண்டும்.பேச்சு குறைபாட்டுக்கான மருத்துவ நிறுவனங்கள், பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லுாரிகள் ஆகியவற்றில் மொழியியல் பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழ் மொழிக்கு இருக்கை அமைப்பதற்கு உலகப் புகழ் வாய்ந்த, 'ஹார்வார்டு' பல்கலைக் கழகம், ஜெர்மனியில் உள்ள 'கொலோன்' பல்கலைக் கழகம் போன்றவற்றுக்கு தமிழக அரசு நிதியுதவி அளிப்பதும் வரவேற்கத்தக்கதே. அதே சமயத்தில், நம் தமிழகத்தில் தமிழை சுத்தமாக பேசவும், எழுதவும் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாமே. குறைந்தபட்சம் தமிழில் ஒரு பக்கமாவது தப்பில்லாமல், சுத்தமாக எழுதுவதற்கு ஆங்காங்கே பயிற்சி பட்டறைகளை உருவாக்கலாமே. அரசு அலுவலகம், மொழியியல் சார்ந்த துறைகளிலாவது குறைந்தபட்சம் அனைவரும் தமிழில் பேச செய்யலாம். பொது இடங்களில் தமிழில் பேசினால், சலுகைகள், பரிசுகள் வழங்கலாம். அதன் பின், உலக நாடுகளில் தமிழ் மொழியை வளர்க்க தமிழ்ப் பள்ளி, கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களில் இருக்கைகளை உருவாக்கலாம். சாதாரண மாணவர்களும் தமிழை கற்றலில் உள்ள குறைபாடுகளை நீக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கலாம். அத்தகைய ஆசிரியர்கள் மொழியில் தலைசிறந்தவர்களாக இருந்தால் தான், சிறந்த மொழியை மாணவர்களுக்கு வழங்க முடியும்

இதற்காக, ஓய்வுபெற்ற, தலைசிறந்த பேராசிரியர் வல்லுனர் குழுவை அமைத்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது முக்கிய பணியாகும். ஏனெனில், தமிழாசிரியர்கள் பலர் கூட, சுத்தமாக தமிழில் பேசுவது இல்லை.

செம்மொழியான தமிழ்
தமிழ் மொழி வளர்ச்சியில் மாநாடுகள் முக்கிய பணியாற்றுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, உலக அளவிலான மாநாடுகள் நடைபெறவில்லை.உலக அளவில் பரவி வாழும் தமிழர்களின் இணைப்பு பாலமாக தமிழ் மொழி தான் விளங்குகிறது. அந்த இணைப்பை, உலகத்தமிழ் மாநாடுகள் மேலும் வலுவுள்ளதாக்கும். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் உலக நாடுகளின் ஆட்சியாளர்கள், உலகத்தமிழ் மாநாட்டின் முடிவுகளை அவரவர் நாடுகளில் அமல்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதே போல, தமிழ் படித்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயனுடையதாக அமையும். இந்தியாவின் தேசிய மொழியாக எதை அறிவிக்கலாம் என்னும் விவாதம் எழுந்த காலத்தில், 'உலகின் மூத்த உயர் தனிச் செம்மொழியான தமிழ் மொழி ஒன்றுக்கு தான், இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்படும் தகுதி உண்டு' என அறிஞர்களும், கல்வியாளர்களும் கருதினர். சிறப்பு நிலைத்தகுதி

அக்கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இலக்கிய, இலக்கண ஆதாரங்களை முன்வைத்தனர். அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய, 'கண்ணியம் மிக்க' காயிதே மில்லத், 'இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ் தான். 'என் கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதைபொருள் ஆராய்ச்சி யாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். 'பழமையான மொழியைத் தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால், இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றார். அத்தகைய உயர்தனிச் செம்மொழிக்கு அக்காலத்திலோ அல்லது அதற்கு பிறகோ இந்திய வரலாற்றில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு நிலைத்தகுதி என்ன என்பது குறித்து சிந்திப்பது அவசியம். ஏனென்றால், பழந்தமிழின் தொன்மையையும், மரபையும் எத்தனை உயர் கல்வி நிறுவனங்கள் மெச்சுகின்றன என்பது ஆராயத்தக்க ஒன்று.வட மாநில பல்கலைக் கழகங்களான பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம், டில்லி பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஆக்ரா பல்கலைக் கழகம், லேடி ஸ்ரீராம் கல்லுாரி - புதுடில்லி, சண்டிகர் பல்கலைக் கழகம், பாட்டியாலா பல்கலைக் கழகம், கல்கத்தா பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம்.அலகாபாத் பல்கலைக் கழகம், லக்னோ பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழுக்கெனத் தனித்தத் துறைகள் அமைக்கப்பட்டன.

தமிழ்த் துறை

ஆனால், தற்போது இவற்றில் எத்தனை பல்கலைக் கழகங்களில் உரிய பேராசிரியர்கள் மற்றும் ஆய்வுக்களங்களுடன் தமிழ்த் துறை இயங்கி வருகிறது என்பது கேள்விக்குறியே. இவற்றில் டில்லி பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், லக்னோ பல்கலைக் கழகம் ஆகியவற்றில் மட்டுமே தற்போது தமிழ்த் துறை இயங்கி வருகிறது. அவற்றின் இயக்கமும் செயல்பாடும் கூட, வளர்ச்சி நோக்கிய வகையில் போற்றத்தக்கதாக இல்லை. அங்கு அப்படி என்றால், திராவிட மொழிகளின் தோற்றுவாயான தென் மாநிலங்களில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் இதை விட இழிநிலை இருந்து வருவது வருந்தத்தக்கது. கேரளா பல்கலைக் கழகம், ஐதராபாத் பல்கலைக் கழகம், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஆந்திரா பல்கலைக் கழகம், வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் - திருப்பதி,திராவிட பல்கலைக் கழகம் - குப்பம், பெங்களூரு பல்கலைக் கழகம், மைசூரு பல்கலைக் கழகம், பம்பாய் பல்கலைக் கழகம் போன்றவற்றிலும் தமிழ்த் துறை தோற்றம் பெற்று இயங்கி வந்தது. எனினும், தற்போது அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது உண்மை. ஏனெனில், இவற்றில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில், தமிழ்த் துறை முறையாக இயங்கவே இல்லை; பேராசிரியர்களின் பணி.இடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. இவை குறித்து சிந்திப்பதற்கும், அவை இயங்குவதற்கு தேவையான நிதிஒதுக்கீடு மற்றும் உழைப்பை வழங்குவதற்கும், மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும். குறிப்பாக, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத, 1947ல் உருவாக்கப்பட்டு, பேராசிரியர்கள் சி.இலக்குவனார், அ. மு.பரமசிவானந்தம், டி.சிங்காரவேலு போன்ற மூத்த அறிஞர்கள் அலங்கரித்த, உஸ்மானியா பல்கலைக் கழகத் தமிழ்த் துறை தற்போது முழுமையாக இயங்காமல் இருக்கிறது. தற்போது தெலுங்கானா வில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும், அந்த மாநில கவர்னராகவும் இருப்பவர் நம் மாநிலத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன்.எனவே, அங்கு தமிழ்த் துறையை சிறப்புடன் செயல்பட செய்வது மிகவும் எளியதும், சிறப்புமாகும். உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை சிறப்புற, கவர்னர் தமிழிசை வழி வகுக்க வேண்டும்.


நன்மை விளையும்
பம்பாய் மற்றும் ஐதராபாத் பல்கலைக் கழகங்களிலும் இதே நிலைமை தான். உலக நாடுகளில் உள்ள பல்கலைக் கழகத்தில் உள்ள இருக்கைகள் எவ்வளவு முக்கியமானதாக அரசுகள் கருதுகின்றனவோ, அதே போல, இந்தியப் பல்கலைக் கழகம் மற்றும் கல்லுாரிகளில் உள்ள தமிழ்த் துறைகள் மற்றும் இருக்கைகளை சீர்துாக்கிப் பார்க்க வேண்டும். மேற்கண்ட மொழியியல் மற்றும் தமிழியல் தொடர்பான அனைத்துத் துறைகளையும் ஒருங்கே ஒருங்கிணைத்து, முழுமையான மொழியியல், தமிழியல் என்ற தன்மையில் தமிழக அரசு திறம்பட செயல்படுத்த வேண்டும்.அதன் மூலம் நம் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் நன்மை விளையும்!
முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்,
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:91766 30415
இ - மெயில்: pann1973@gmail.com

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews