மாணவர் சேர்க்கை விவகாரம்: சிறுபான்மை கல்லூரிகளுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

மாணவர் சேர்க்கை விவகாரம்: சிறுபான்மை கல்லூரிகளுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை



மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக சிறுபான்மை கல்லூரிகளுக்கு சிறுபான்மை ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை லயோலா கல்லூரி முதல்வர் ஆன்ட்ரூ பிரான்சிஸ், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் 50 சதவீத இடங்களை சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாணவர்களை கொண்டு நிரப்பினால் மட்டுமே சிறுபான்மை அந்தஸ்து தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணைப்படி 2016-2017-ம் கல்வி ஆண்டு முதல் தற்போதைய கல்வி ஆண்டு(2018-2019) வரை மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரத்தை அளிக்க வேண்டும் என்று மாநில சிறுபான்மை ஆணையம் எங்கள் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையத்துக்கு எந்த உரிமையும் இல்லை.

எனவே, இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை அந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. சட்டவிரோதம் இதேபோன்று, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கல்லூரி முதல்வர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஐசக்மோகன்லால், வக்கீல் காட்சன் சுவாமிநாத் ஆகியோர், ‘மாணவர்கள் சேர்க்கை குறித்து உரிய முடிவு எடுக்க சிறுபான்மை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் 50 சதவீத இடங்களை சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று கூறுவது சட்டவிரோதம். நடைமுறையில் இயலாத காரியம். தகுதி உள்ள சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு சேர்க்கை மறுப்பது இல்லை’ என்று வாதாடினர்.

இடைக்கால தடை மனுவை விசாரித்த நீதிபதி, சிறுபான்மை ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குனர், சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews