கல்வி அலுவலர் லஞ்சம் வசூலிப்பதாகப் புகார்: “நடவடிக்கை எடுக்கப்படுமா?” - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! Education officer accused of accepting bribe: "Will action be taken?" - Teachers' expectations!
தமிழ்நாட்டில் 2001–2006 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தற்காலிக அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, அப்போதைய முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசு அந்த ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் அமர்த்தி உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தற்போது 20 ஆண்டுகள் பணியை நிறைவு செய்து 21-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். இவ்வாறு 20 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதிய உயர்வின் அடிப்படையில், தற்போது கிடைக்கும் 3 சதவீத இன்கிரிமென்டுடன் கூடுதலாக மேலும் 3 சதவீதம் சேர்த்து மொத்தம் 6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. இதற்கான பட்டியல்கள் வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும், அங்கிருந்து சென்னை இயக்குநர் அலுவலகத்திற்கும் அனுப்பப்பட வேண்டும்.
இந்த நிலையில், வட்டார கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர், ஆசிரியர்களிடம் தலா ரூ.5,000 வசூலிப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஆசிரியர்கள் ஒன்றாக வராமல் தனித்தனியாக வருமாறு கூறி பணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என்றும், முறைகேடுகள் இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய ஆட்சியில் இதுபோன்ற புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.