கடந்த 2 ஆண்டுகளில் 150 மாணவர்களை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய அரசு மாதிரி பள்ளி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2024

Comments:0

கடந்த 2 ஆண்டுகளில் 150 மாணவர்களை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய அரசு மாதிரி பள்ளி



கடந்த 2 ஆண்டுகளில் 150 மாணவர்களை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய அரசு மாதிரி பள்ளி

சிவகங்கை அரசு மாதிரி பள்ளி கடந்த 2 ஆண்டுகளில் 150 மாணவர்களை மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி, தமிழகத்திலேயே சிறந்தபள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 39 அரசு மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. சென்னையில் மட்டும் 2 பள்ளிகள் இயங்குகின்றன. சிவகங்கை மாவட்ட மாதிரி அரசுப் பள்ளி, கீழக்கண்டனியில் 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. உண்டு உறைவிடப் பள்ளியான இங்கு, அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணிதம், உயிரியல், கலை என 3 பிரிவுகளில் பயில்கின்றனர்.

மேலும், நீட், ஜேஇஇ உட்பட 24 வகையான மத்திய அரசு நுழைவுத் தேர்வுகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டண செலவுகளை அரசே ஏற்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் இங்கு பயின்ற 4 பேர் நீட் தேர்ச்சி பெற்றுஎம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர். மேலும், ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று 13 பேர் பொறியியல் படிப்பிலும், பொதுச்சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருவர் சட்டக் கல்லூரியிலும், கட்டிடக் கலைக்கான தேசிய திறன் தேர்வில் வெற்றி பெற்று 3 பேர் உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்ந்துள்ளனர். இதேபோல, 150-க்கும் மேற்பட்டோர் மத்திய, மாநிலஅரசுகளின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

இதன்மூலம், சிவகங்கை அரசு மாதிரிப் பள்ளி தமிழகத்திலேயே சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு சமீபத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான சிறந்தபள்ளி விருது கிடைத்துள்ளது. இந்தவிருதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார். இதுதவிர, விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கியதற்காக, உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமாருக்கும் விருது கிடைத்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் போஸ், உதவி தலைமைஆசிரியர் காளிதாஸ் ஆகியோர் கூறும்போது, "இங்கு பெரும்பாலும் கிராமப்புற ஏழை மாணவர்கள்தான் பயில்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசு எந்தெந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது என்பதை விளக்கி, அவர்கள் தேர்வு செய்யும் தேர்வுகளுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கிறோம். மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவும்கற்றுக் கொடுக்கிறோம்" என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews