பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 02, 2024

Comments:0

பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு



விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜனவரி 2) முதல் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 13 முதல் 22-ம் தேதி வரை நடத்தப்பட்டன. நடப்பாண்டு ஒரே வினாத்தாள் முறையில் இத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தொடர்ந்து டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி நேற்று வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.

இதற்கிடையே தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18-ம் தேதி பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சில பாடங்களுக்கு தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கனமழை பாதிப்பை கருத்தில் கொண்டு அந்த 3 மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு விடுப்புக்கு பின்னர் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இந்நிலையில் தொடர் விடுமுறைக்குபின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதன்படி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதற்கிடையே மழை பாதித்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களுக்கான அரையாண்டு தேர்வை பள்ளி அளவில் ஜனவரி 11-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சீருடைகள் உட்பட பொருட்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மழை பாதித்த தென் மாவட்டங்களில் ஜன.11-க்குள் பள்ளி அளவில் அரையாண்டு தேர்வு நடக்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews