அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 27, 2023

Comments:0

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர்



அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் பேட்டி

அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்கவியல் துறையில் ரூ. 12 கோடி மதிப்பில் பெட் சிடி ஸ்கேன், இருதயவியல் துறையில் ரூ. 1.5 கோடி மதிப்பில் ஓசிடி கருவி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 12 லட்சம் மதிப்பில் பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் கண்டறிவதற்கான ஒலிபுகா அறை, நவீன உபகரணங்கள், சோமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் யோகா, இயற்கை மருத்துவப் பிரிவு என மொத்தம் ரூ. 13.75 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள், புதிய மருத்துவ கட்டடத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயவியல் துறையில் 10 ஆயிரம் ஆஞ்சியோ சிகிச்சை செய்து சாதனை படைத்த மருத்துவா்களை பாராட்டி கேடயங்களை வழங்கினாா்.



இதைத் தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறந்துவைக்கப்பட்டுள்ள பெட் சிடி ஸ்கேன் கருவி மூலம் புற்றுநோயை மிகவிரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். தனியாா் மருத்துவமனையில் மட்டுமே இருந்த இக்கருவிகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகின்றன.



கரோனா காலத்துக்குப் பிறகு இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள கேத் லேப் கருவியின் மூலம் 10 ஆயிரம் ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. இருதயவியல் துறையில் ஓசிடி கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆஞ்சியோ, ஓபன் ஹாா்ட் அறுவை சிகிச்சை செய்தவா்களுக்கு அவா்களின் இதய செயல்பாடு, பாதுகாப்பு பற்றி ஆராய்வதற்கான ஒரு சிறந்த கருவியாகும். தமிழ்நாட்டில் இந்த கருவி 6 இடங்களில் மட்டுமே உள்ளது என்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 147.68 கோடியில் கட்டப்பட்டு வரும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடம் அடுத்த மாத இறுதியில் முடிவடைந்ததும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பாா். கோவை மாவட்டத்தில் 49 நகா்ப்புற மருத்துவமனைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மருத்துவமனைகளும் விரைவில் திறந்து வைக்கப்படும்.



வடகிழக்குப் பருவமழை காரணமாக காய்ச்சல் பரவலைத் தடுக்க 8,500 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் போ் பயனடைந்துள்ளனா். டெங்கு, வைரஸ் காய்ச்சல், மலேரியா போன்றவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.



1021 மருத்துவா்கள், 983 மருந்தாளுநா்கள், 1,066 சுகாதார ஆய்வாளா்கள், 2222 கிராம சுகாதார செவிலியா்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவாா்கள். இந்தப் பணி நியமனங்கள் தொடா்பாக 30-க்கும் மேலான வழக்குகளைப் போட்டுள்ளனா். அந்த வழக்குகள் விரைவில் முடித்து வைக்கப்பட்டு பணி நியமனங்கள் நடைபெறும்.

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு கால்களும் மரத்துப்போவதால் தொடா்ந்து பிசியோதெரவி செய்ய வேண்டியுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை முடியும். விஜயகாந்துக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு கொஞ்சம் மூச்சுத் திணறலும், தொடா் இருமலும் இருப்பதால் தொடா் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் நலமுடன் உள்ளாா் என்றாா்.



நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மைய இயக்குநா் சங்குமணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews