அரசுப் பள்ளிகளில் ஒரே நாளுடன் முடிவடைந்த காலை உணவுத் திட்டம் - மீண்டும் வருமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 27, 2023

Comments:0

அரசுப் பள்ளிகளில் ஒரே நாளுடன் முடிவடைந்த காலை உணவுத் திட்டம் - மீண்டும் வருமா?

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளி மாண வர்கள் பயன்பெறும் வகையில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் தொடரப்படாமல் ஒரே நாளுடன் முடிவடைந்த நிலையில் உள்ளது. தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மதிய உணவை கல்வித்துறை வழங்கி வந்தது. இதற்கிடையே, பெங்களூருவைச் சேர்ந்த ‘அட்சய பாத்ரா’ அறக்கட்டளையுடன் கடந்த 2018-ல் புதுச்சேரி கல்வித்துறை ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. அதன்படி, இந்த ‘அட்சய பாத்ரா’ தன்னார்வ அமைப்பு புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவை வழங்கி வருகிறது. இதற்காக, லாஸ்பேட்டை மைய சமையல் கூடத்தை ரூ. 13 கோடியில் ‘அட்சய பாத்ரா’ அமைப்பினர் நவீனப்படுத்தி, மதிய உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.

இந்த மதிய உணவுத் திட்டத்துக்காக, மத்திய அரசு அளிக்கும் மானியத்துடன் புதுச்சேரி அரசு அளிக்க வேண்டிய பங்கில் பாதியளவு மட்டுமே ‘அட்சய பாத்ரா’ அறக்கட்டளைக்கு அளிக்கப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு ரூ. 2 கோடி வரை புதுச்சேரி அரசுக்கு சேமிப்பாகிறது.



‘அட்சய பாத்ரா’ அமைப்பினர் சைவ உணவு மட்டுமே தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். அதனால், ஏற்கெனவே புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பணியில் இருக்கும் ரொட்டி- பால் வழங்கும் ஊழியர்கள் மூலம் பள்ளிமாணவர்களுக்கான முட்டை வழங்கப்படுகிறது.

இந்தச் சூழலில், ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, “மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில், புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று கடந்த காங்கிரஸ் ஆட்சியில், அப்போதைய முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, கடந்த 2020 நவம்பர் 12-ம் தேதி இத்திட்டத்தை நாராயணசாமி தொடங்கி வைத்தார். இட்லி, சாம்பார், சட்னி, கேசரி என்று தடபுடலாக தொடங்கிய திட்டம் ஒரே ஒரு நாள் மட்டுமே நடைமுறையில் இருந்தது. அதன் பிறகு பள்ளி விடுமுறை நாட்கள் வர, “பள்ளி திறக்கும்போது செயல்படுத்தப்படும்” என்றார்கள். இப்படிச் சொல்லி இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன. திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

இதுபற்றி கல்வியாளர்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரி மற்றும் காரைக்காலையொட்டி தமிழக அரசுப் பள்ளிகள் பல உள்ளன. அங்கு காலை உணவுத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் இல்லை. தற்போது, புதுச்சேரியில் மதிய உணவை ‘அட்சயா பாத்ரா’ அமைப்பே தருகிறது. அதனால் மிச்சமாகும் நிதியை வைத்து, மாணவர்களுக்கு இந்த காலை உணவைத் தரலாம்” என்று தெரிவித்தனர்.

“கருணாநிதி பெயரால் அறிவிக்கப்பட்ட காலை உணவுத்திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சியான திமுக எவ்வித கேள்வியும் எழுப்பாமல் மவுனம் காக்கிறது. அவர்களும் இதில் அழுத்தம் தரலாம். அப்படி தரும்பட்சத்தில் இதை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு உருவாகும்" என்ற கருத்தும் நிலவுகிறது.

இதுபற்றி கல்வித்துறை தரப்பில் கேட்டதற்கு, "புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் தருகிறோம். அதேபோல் முட்டை தருகிறோம். விரைவில் மாலையில் சிறுதானிய சிற்றுண்டியும் தரவுள்ளோம். அதனால் காலை உணவு தர வாய்ப்பில்லை. எனினும் இதுதொடர்பான வலியுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், இதை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறோம்" என்று தெரிவித்தனர

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews