அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் விவகாரம்- தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கை சொல்வது என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 04, 2023

Comments:0

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் விவகாரம்- தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கை சொல்வது என்ன?

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் விவகாரம்- தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கை சொல்வது என்ன?

ஓய்வூதிய திட்டம் தொடர்பான தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கை குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது

புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் மாறுவது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளதாகவும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்கள் விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தமிழ்நாடு அரசு பிறப்பித்திருந்த உத்தரவு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2004-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டமான தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் உள்ளது. இப்பங்களிப்பு பென்சன் திட்டத்தில் ஓய்வூதியம் என்பது உத்தரவதம் எதுவும் இல்லை என்பது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு. பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள், இப்புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் அரசு ஊழியர்களின் அதிருப்தி. ஆகையால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் அரசு ஊழியர்கள். கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. தற்போது ஆளும் திமுக, தமது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்களிடையே வரவேற்பையும் பெற்றது. திமுக ஆட்சி அமைந்தது முதல் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. அதேநேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் சில விளக்கங்கள் தரப்பட்டன. இதனை அரசு ஊழியர்கள் ஏற்கவில்லை. மேலும் தமிழ்நாடு தழுவிய அளவில் சிபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தை ஒழிப்பதற்கான இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முன்னெடுத்தனர். அண்மையில் சென்னையில் பிரம்மான்டமான மாநாடும் நடத்தப்பட்டது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் இம்மாநாட்டை நடத்தி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஒரு தகவல் வெகுவேகமாக பரவியது. தமிழ்நாடு அரசு நிதித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலகி பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன என்பது அத்தகவல். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்காக இந்த சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.

இது தொடர்பாக தலைமை செயலக வட்டாரங்கள் கூறியதாவது:

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு பணியில் இணைந்தவர் நிரந்தரமாக்கப்பட்ட போது புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. அவர்கள் பணி ஓய்வு பெறும் போது புதிய ஓய்வூதியத்தின் கீழ் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பான விவரங்களைத்தான் தமிழ்நாடு அரசு கேட்டிருந்தது. இவ்வாறு தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews