பொதுத் தேர்வு: பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 15, 2023

Comments:0

பொதுத் தேர்வு: பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

பொதுத் தேர்வு: பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. அடுத்து, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வர்களின் அடுத்தகட்ட கல்விக்கு வழிகாட்டப்போவது இந்தத் தேர்வுதான்.

எனவே, அதை மனதில் வைத்து ஒவ்வொரு தேர்வரும் தயாராகியிருப்பார்கள். பொதுத்தேர்வு என்றால் ஒருவித பதற்றம், சரியாக அனைத்தையும் எழுத வேண்டும் என்கிற எண்ணம் பொதுவாகத் தேர்வர்களுக்கு ஏற்படும்.

ஆனால், இந்தக் காலத்தில் தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகளைவிடப் பெற்றோரே அதிக பதற்றத்துக்கு ஆளாகி, சில நேரத்தில் பிள்ளைகளையும் அவ்வாறே ஆக்கிவிடுகிறார்கள். தேர்வு நேரத்தில் பெற்றோர் எப்படி அணுக வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

# உங்கள் மகனோ, மகளோ எந்த அளவுக்குப் படிப்பவராக இருந்தாலும், தேர்வுக்குச் செல்லும்போது அவர்களை நேர்மறையோடு வாழ்த்தி வழியனுப்புங்கள். உங்கள் பிள்ளைகள் மீது நீங்கள் நம்பிக்கையைக் காட்டுகிறபோது தேர்வு அறையில் அதிக நம்பிக்கையுடையவராக அவர்கள் உணர்வார்கள். # தேர்வுக்காகத் தயாராகும் உங்கள் பிள்ளைக்காக இரவில் தேநீர் போட்டுத் தருவது, அவர்களுடன் சேர்ந்து விழித்திருப்பது ஆகியவற்றைவிட மிக முக்கியம், அவர்களைப் பாராட்டுவதுதான். ஒவ்வொரு குறிப்பிட்ட தேர்வுக்கும் எப்படியெல்லாம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கேட்டு, அதைப் பாராட்டுங்கள். உற்சாகத்தோடு உங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அதே வேளையில் யோசனைகளை அடுக்கி அவர்களைக் குழப்ப வேண்டாம்.

# தேர்வு என்பது உங்கள் பிள்ளையின் அறிவையும் திறனையும் சோதிப்பது. இதைப் பெற்றோர் முதலில் உணர வேண்டும். தேர்வுகள் வாழ்க்கையின் முடிவு அல்ல, தொடக்கமே என்பதை உணர்ந்து, தேர்வு எழுதி வந்த பிள்ளையை அணுக வேண்டும்.

# தேர்வு கடினமாக இருந்திருக்கலாம். தவறாக எழுதியது தேர்வுக்குப் பின்னர் தெரிய வந்திருக்கலாம். அதற்காக உங்கள் பிள்ளை சோர்ந்துபோனால், அவர்கள் மனதை லேசாக்கி, எழுதி முடித்த தேர்விலிருந்து வெளியே வரவைக்க வேண்டிய பங்கு பெற்றோருக்கே உண்டு. ‘அப்போ முழு மதிப்பெண் வராதா’ என்று நீங்களும் பேசி, அடுத்தத் தேர்வுக்கு உங்கள் பிள்ளையின் நம்பிக்கையைச் சீர்குலைத்துவிடாதீர்கள்.

# தேர்வுக் காலத்தில் குடும்ப விஷயத்தை, கஷ்டமான விஷயத்தையெல்லாம் பேசி, எக்காரணம் கொண்டும் உங்கள் பிள்ளையின் கவனச் சிதறலுக்குக் காரணமாக இருந்துவிடாதீர்கள். இவையெல்லாம் தேர்வு எழுதுவோருக்கு அழுத்தத்தையே ஏற்படுத்தும். # தேர்வு எப்படி இருந்தாலும், தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்கிற தாரக மந்திரத்தை உங்கள் பிள்ளையின் மனதில் பதியும்படி செய்யுங்கள். அது உங்கள் பிள்ளைக்கு நம்பிக்கையை மட்டுமல்ல, வாழ்க்கை பற்றிய புரிதலையும் ஏற்படுத்தும்.

# படித்தது மறந்துவிட்டது, படித்தாலும் சரியாக ஏறவில்லை என்று தேர்வு நேரத்தில் பிள்ளைகள் சற்று பலவீனமாக இருப்பது போன்று உணர்வார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் ஆக்கபூர்வமாகப் பேசி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அந்த நேரத்தில் திட்டினால், உங்கள் பிள்ளை இன்னும் பலவீனமாகிவிடக்கூடும் என்பதால் பொறுப்புடன் நாம் செயல்பட வேண்டும்.

# பொதுத்தேர்வு எழுதும் உங்கள் பிள்ளையைப் பெருமிதமாக எண்ணுங்கள். தேர்வுக்காகத் தயாராகும் அவர்களுடைய கடின உழைப்பு, முயற்சியை நீங்கள் மதித்து, பாராட்டி மகிழுங்கள். அவர்களுக்குள் நேர்மறையான எண்ணம் அதிகரிப்பதை உணர்வீர்கள்.

தேர்வெழுதும் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கு வழிகாட்டும் பெற்றோருக்கும் வாழ்த்துகள்!

தொகுப்பு: மிது கார்த்தி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews