இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 31, 2022

Comments:0

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொள்கையின்படி நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும். பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் வலியுறுத்தல்

2009 ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியேற்றது முதல் தொடர்ந்து ஊதிய இழப்பை சந்தித்து வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை சரி செய்யும் வகையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி 2009ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறது மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வென்றெடுத்தது. இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை அதற்கு நிகரான ஒன்றுதான் அதனால்தான் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் இதனையே முதன்மை கோரிக்கையாக வலியுறுத்தி வந்துள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் இடைநிலை ஆசிரியர்கள் ஒற்றைக்கோரிக்கையாக அணிதிரண்டு சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களின் இப்போராட்டம் வெற்றி பெற வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகிறது. இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் தங்களது கோரிக்கைக்காக போராடுகிறார்கள் என்று அரசு எளிதாக கருதி விடக்கூடாது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட ஆசிரியர் நலன் சார்ந்த சங்கங்களின் வடிவமாகவே இந்தப் போராட்டத்தை அரசு உற்று நோக்க வேண்டும். மிகச்சரியான கோரிக்கையை முன்னிறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டத்தை தமிழகஅரசு வெற்றி பெற செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை உடனடியாக நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில், விரைவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாதில செயற்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதில் நேரிடையான கவனம் செலுத்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்தாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews