நீட் தேர்வில் தவறான கேள்வி: பதிலளிக்க தவிர்த்த மாணவருக்கு மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 21, 2022

Comments:0

நீட் தேர்வில் தவறான கேள்வி: பதிலளிக்க தவிர்த்த மாணவருக்கு மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வில் தவறான கேள்வி: பதிலளிக்க தவிர்த்த மாணவருக்கு மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
 
நீட் தேர்வில் தவறான கேள்விக்குப் பதிலளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர், தவறான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்காமல் தவிர்த்துள்ளார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்ற அவர், விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மத்திய அரசுக்கும், தேர்வு முகமைக்கும் மனு அனுப்பினார்.

அவரது மனு பரிசீலிக்கப்படாததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேள்வியை தவிர்க்காமல் ஏதாவது ஒரு விடையை அளித்திருந்தால் மட்டுமே கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. இதை அடுத்து, இதுசம்பந்தமான விதியை எதிர்த்து புதிதாக வழக்கு தொடர அனுமதி கோராமல், வழக்கு திரும்பப் பெறப்பட்டது. புதிதாக வழக்கு தொடர அனுமதி பெறாமல், அதே கோரிக்கையுடன் மீண்டும் தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெரிவிக்கிறது எனச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட மாணவருக்கு கருணை மதிப்பெண்களாக நான்கு மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டது.

மேலும், திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை மாணவருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவருக்கு ஏற்பட்ட சூழலை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை முன்னுதாரணமாக கருதக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews