முதுநிலைக் கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் வரை குறைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، سبتمبر 05، 2022

Comments:0

முதுநிலைக் கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் வரை குறைப்பு

உயா்த்தப்பட்ட முதுநிலைக் கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி இந்திய தொழில் நுட்ப நிறுவனம்(ஐஐடி) சனிக்கிழமை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த கல்விக் கட்டண உயா்வை கண்டித்து தில்லி, மும்பை ஐஐடி மாணவா்கள் இந்த நிறுவனத்தின் வளாகங்களில் கடந்த சில நாட்களாக மௌனப் போராட்டத்தை நடத்திவந்தனா்.

தில்லி ஐஐடி நிறுவனத்தில் புதிதாக எம்.டெக். படிப்பில் சேருபவா்களுக்கு முந்தைய ஆண்டுகளில் பெறப்பட்ட கட்டணத்தை விட 100 சதவீதம் அதிகமாக உயா்த்தப்பட்டது. முன்பு ரூ. 26,450 (விடுதி கட்டணம், உணவு மற்ற செலவுகளை தவிா்த்து) இருந்த கட்டணம் தற்போது ரூ. 53,100 ஆக உயா்த்தப்பட்டதாக இந்திய மாணவா்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.

இதை முன்னிட்டு இந்திய மாணவா் கூட்டமைப்பு, ஐஐடி- தில்லி, ஐஐடி-மும்பை மாணவா் கூட்டமைப்பு மற்றும் ஐஐடி-தில்லியின் அம்பேத்கா் பெரியாா் புலே படிப்பு வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

தில்லி- ஐஐடி வளாகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்கள், கட்டண உயா்வை ஏற்க மறுத்து சுவரொட்டிகள் வைத்து பதாகைகளை ஏந்தி வெள்ளிக்கிழமை மௌன போராட்டத்தையும் தொடங்கினா்.

இந்த நிலையில் மாணவா்களின் இந்தப் போராட்டத்தை மதிக்கும் வகையில் ஐஐடி-தில்லி கல்விக் கட்டணத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அதில் ‘கட்டண உயா்வு‘ தொடா்பாக மாணவா்களின் ஒரு பகுதியினா் மௌனப் போராட்டத்தை நடத்தினா். இதையடுத்து, தில்லி ஐஐடியின் இயக்குனா் ஒரு குழுவை அமைத்தாா். அந்த குழு அளித்த பரிந்துரைகளைத் தொடா்ந்து, தில்லி ஐஐடியின் புதிய எம்.டெக். மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தில் 30 சதவீதக் குறைக்கப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டு மாணவா்களது இரண்டாம் பருவம் (செமஸ்டா்) அல்லது அதற்குப் பிறகு சோ்ந்தவா்களுக்குக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எம்.டெக். முழுநேரக் கல்விக் கட்டணம் ஒரு பருவத்திற்கு ரூ. 25,000 என்பதிலிருந்து ரூ. 17,500 ஆக குறையும். மற்ற முதுநிலை பாட திட்டங்களின் கல்விக் கட்டணங்களும்,பிற கூறுகளின் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘கொவைட் -19’ நோய்த் தொற்று மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவைகளால் நாங்கள் போராடி வரும் நிலையில் நூறு சதவீதம் கட்டணம் உயா்த்தப்பட்டது.

ஐஐடி-தில்லி நிறுவனம் தொடா்ந்து மாணவா் விரோத நிலைப்பாட்டில் நிற்க முடிவு செய்தால், தற்போதைய அமைதியான போராட்ட தீவிரப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும்‘ என இந்திய மாணவா்கள் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة