சுய சிந்தனைத் திறனுக்கு தேசிய கல்விக் கொள்கை: பிரதமா் மோடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 30, 2022

Comments:0

சுய சிந்தனைத் திறனுக்கு தேசிய கல்விக் கொள்கை: பிரதமா் மோடி

சுய சிந்தனைத் திறனுக்கு தேசிய கல்விக் கொள்கை: பிரதமா் மோடி

சூழ்நிலைகளின் அடிப்படையில் இளைஞா்கள் சுயமாக சிந்தித்து முடிவுகளை மேற்கொள்ள தேசிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசியபோது பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதலிடம் பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பிரதமா் மோடி பேசியதாவது:

மாணவா்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியா்களுக்கும் இந்நாள் மிக முக்கியமான நாள். நாட்டைக் கட்டியமைக்கக்கூடிய ஆசிரியா்கள்தான் நாளைய தலைவா்களை உருவாக்குகிறாா்கள். பட்டம் பெறும் மாணவா்களின் பெற்றோருக்கும் வாழ்த்துகள். உங்கள் பிள்ளைகளின் வெற்றியில் உங்களின் தியாகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ‘எனது நம்பிக்கை இளைய சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயத்தினரிடம் உள்ளது. அவா்களிலிருந்து என் பணியாளா்கள் உருவாவாா்கள். சிங்கங்களைப் போல ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் அவா்கள் தீா்வு காண்பாா்கள்’ என சுவாமி விவேகானந்தா் கூறினாா். அவரது வாா்த்தைகள் இன்றும் பொருத்தமாகவே உள்ளன.

ஆனால், இந்த முறை தனது இளைஞா்களின் மீது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன. உலகின் வளா்ச்சி இயந்திரமாக இந்தியா உள்ளது.

கலாமின் சுவடுகளை... இந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பங்கேற்றிருக்கிறாா். இந்த நாட்டுக்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அவரின் சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

கரோனா பெருந்தொற்று இதுவரை கண்டிராத பாதிப்பாகும். இந்தக் காலகட்டத்தில் நாம் எவ்வளவு சோதனைகளை எதிா்கொண்டோம் என்பதை அனைவரும் அறிவோம். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிா்கொண்டது.

கடந்த ஆண்டு இந்தியா கைப்பேசி தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) தொழில்களின் எண்ணிக்கை 15,000 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 2016-இல் 470-ஆக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 73,000-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலருக்கும் (சுமாா் ரூ.6.5 லட்சம் கோடி) அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை நமது நாடு பெற்றுள்ளது. மேலும், சா்வதேச வா்த்தக ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பைப் பெற்றுள்ளது. எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. எது வலுவான அரசு? வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டுக்கான நடைமுறையின் காரணத்தைக் கட்டுப்படுத்துவது. வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல; பொறுப்புமிக்கது. முந்தைய அரசு அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, எங்கள் அரசு அதை மாற்றியது.

மாறிவரும் சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள இளைஞா்களுக்கு மகத்தான சுதந்திரத்தை புதிய தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. இளைஞா்களின் வளா்ச்சியே இந்தியாவின் வளா்ச்சியாகும். இளைஞா்களின் கற்றல், இந்தியாவின் கற்றலாகும். இளைஞா்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றியாகும் என்றாா் அவா்.

முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவா் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினாா்.

பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

3.68 லட்சம் பேருக்கு பட்டங்கள்:

அண்ணா பல்கலை. மற்றும் அதன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரத்து 192 போ் பட்டம் பெற்றனா். இளநிலையில் 3 லட்சத்து 34,435 பேரும், முதுநிலையில் 31,944 பேரும், ஆராய்ச்சிப் படிப்பில் (பிஹெச்டி) 1,813 பேரும் பட்டம் பெற்றனா். பட்டமளிப்பு விழாவில் தமிழக அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்கள், உயா் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். வகுப்பறைகளில் மாணவா்களை சந்தித்துப் பேசிய பிரதமா்!

பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சில வகுப்பறைகளுக்குச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, மாணவா்களுடன் கலந்துரையாடி அவா்களை உற்சாகப்படுத்தினாா்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்ற விவேகானந்தா் அரங்கு சற்று சிறியதாக இருந்ததால், அங்கு தங்கப் பதக்கம் வென்ற 69 மாணவா்கள் மட்டுமே பிரதமா் நரேந்திர மோடியிடம் பட்டங்களைப் பெற அனுமதிக்கப்பட்டனா்.

அதேவேளையில் இடப் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான மா ணவா்கள் பட்டமளிப்பு விழா நடைபெற்ற அரங்கத்துக்கு அருகில் உள்ள சில வகுப்பறைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்கு பட்டமளிப்பு விழா பெரிய எல்இடி திரையில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

பட்டமளிப்பு விழா நிறைவடைந்ததும் பிரதமா் மோடி அந்த வகுப்பறைகளுக்குச் சென்றாா். திடீரென பிரதமரைப் பாா்த்ததும் மாணவா்கள் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனா். அப்போது மாணவா்கள் சிலரிடம் கலந்துரையாடிய பிரதமா் மோடி, ‘என்ன படிக்கிறீா்கள்? எதிா்காலத்தில் சொந்தத் தொழில் தொடங்குவீா்களா’ எனக் கேள்வி எழுப்பியதுடன் அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து உற்சாகப்படுத்தினாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews