'குரூப் - 4' தேர்வு நிறைவு: கேள்வி வடிவத்தில் புதுமை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 25, 2022

Comments:0

'குரூப் - 4' தேர்வு நிறைவு: கேள்வி வடிவத்தில் புதுமை

தமிழகத்தில் நேற்று நடந்த குரூப் - 4 தேர்வில் புதிய வடிவில் அதிக கேள்விகள் இடம் பெற்றன.

தமிழக அரசு துறைகளில், கிராம நிர்வாக அலுவலர் 274; இளநிலை உதவியாளர் 3,593, தட்டச்சர் 2,108; சுருக்கெழுத்தர் 1,024 உள்ளிட்ட, 7301 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியே, குரூப் - 4 தேர்வு நேற்று நடத்தப்பட்டது.இந்த தேர்வில் பங்கேற்க 22 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மாநிலம் முழுதும், 7,689 மையங்களில், தேர்வுகள் நடந்தன. இதில், 19 முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்றனர். புதிய வடிவ கேள்விகள்

நேற்றைய தேர்வின் வினாத்தாளில், சரியான விடையை தேர்வு செய்யும் வகையில், 300 மதிப்பெண்களுக்கு, 200 கேள்விகள் இடம் பெற்றன. அவற்றில், 100 கேள்விகள் பொது தமிழ் பிரிவிலும்; 100 கேள்விகள் பொது படிப்பிலும் இடம் பெற்றன. இந்த முறை வழக்கமானது போல இல்லாமல், வடிவம் மாற்றி, கேள்விகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.வழக்கமாக இடம் பெறும், நேரடியாக பதில் அளிக்கும் கேள்விகள் குறைக்கப்பட்டு, சிந்தனை திறனை ஆய்வு செய்யும் வகையில், சரியான இணையை தேர்வு செய், தவறான கூற்றை கண்டறி என, புதிய வடிவில் அதிக கேள்விகள் இடம் பெற்றன. குறிப்பாக, பொருத்துக வடிவில் அதிக அளவு கேள்விகள் இடம் பெற்றன.

இதையும் படிக்க | Co-Proceedings of SMC Meeting Guidelines by CoSE, DEE & SPD

பொது அறிவு அதிகம்

மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வர்கள்; செம்மொழி விருது பெற்ற மொழிகள்; கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்; தேசிய பூங்காக்களின் மாநிலங்கள்; நிடி ஆயோக் தலைவர் போன்றவை குறித்த கேள்விகள் இடம் பெற்றன.மூவலுார் ராமாமிர்தம் திருமண உதவி தொகை; தமிழகத்தில் பத்தமடை பாய், தஞ்சாவூர் ஓவியம் உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்; சர்க்காரியா ஆணையம்; உச்சநீதிமன்ற நீதிபதி பொம்மை தீர்ப்பு; செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பிய நாடுகளும், திட்டங்களின் பெயர்களும் என, பொது அறிவு கேள்விகள் அதிகமாக இடம் பெற்றன. இதையும் படிக்க | பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அக்டோபரில், 'ரிசல்ட்'

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்; தேசிய நுாலக நாள்; பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தவர்; வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு; தொல்லியல் ஆய்வு நடந்த ஆதிச்சநல்லுாரின் மாவட்டம் ஆகிய பொது அறிவு சார்ந்த கேள்விகளும் இடம் பெற்றன.தேர்வர்கள் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு வரையிலான பழைய, புதிய பாட திட்டத்தையும், பொதுவான நாட்டு நடப்புகள் மற்றும் வரலாற்றையும் படித்திருந்தால், குரூப் - 4 தேர்வில், அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம்' என்றனர். இந்த தேர்வின் முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews