தாமதமாகும் CBSE தேர்வு முடிவுகள்: விளைவுகள் என்னென்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يونيو 24، 2022

Comments:0

தாமதமாகும் CBSE தேர்வு முடிவுகள்: விளைவுகள் என்னென்ன?

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதத்தில் என்றால் இரண்டாவது வாரத்திலா? கடைசி வாரத்திலா என்பதில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் கடும் குழப்பத்தில் உள்ளது.



ஏற்கனவே தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கான பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் வரப்பெற்று வருகின்றன.



இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு இன்னமும் தேர்வு முடிவுகளே அறிவிக்கப்படவில்லை என்பதால், கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



இது குறித்து சில கல்லூரிக் குழுமங்கள் கூறுகையில், தமிழக அரசுதான் உடனடியாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசத்தை, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை நீட்டிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி குறைந்தபட்சம் ஐந்து நாள்கள் வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.



ஆனால், பல கல்லூரி நிர்வாகங்கள், இவ்வாறு மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்துவது, ஒட்டுமொத்த கல்லூரி கல்வி அமைப்பையே பாதிக்கும் என்றும், கல்லூரிகளை தாமதமாகத் தொடங்கினால், உரிய பாடங்களை நடத்தி முடிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த நேரிடும் என்றும் அஞ்சுகிறார்கள்.



ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதலே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளைத் தொடங்கிவிட்டன. ஆனால் இதுவரை 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது குறித்து சிபிஎஸ்இ அறிவிக்கவேயில்லை. ஜூன் 15ஆம் தேதிதான் தேர்வுகள் நிறைவு பெற்றதால், ஜூலை மூன்றாவது வாரத்தில்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.



அதாவது மாணவர் சேர்க்கையைத் தொடங்கி நிறைவு செய்ய கல்லூரிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஆகும். எனவே, செப்டம்பரில்தான் முதலாமாண்டு கல்லூரிகளை தொடங்க முடியும் என்கிறார்கள் அரசுக் கல்லூரி தலைமை பேராசிரியர்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே, முதல் கட்-ஆப் மதிப்பெண் பட்டியலை வெளியிடுவதா வேண்டாமா என்பதிலும் குழப்பம் நிலவுகிறதாம். சில தனியார் கல்லூரிகள், தங்களது மாணவர் சேர்க்கையத் தொடங்கிவிடப்போவதாகவும், சுயநிதி பாடத்திட்டங்களுக்கான கட்-ஆப் பட்டியலை வெளியிடப்போவதாகவும் கூறுகின்றன.



இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவிருக்கிறது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் 59,509 பேர் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக காத்திருக்கும் சிபிஎஸ்இ மாணவர்களின் பெற்றோர்களுக்கும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற குழப்பமும், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கிடைக்குமா? அதற்குள் பல கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்திருக்குமா என்ற கலக்கமும் ஏற்பட்டுள்ளது.



இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம்தான் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة