தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு முறைகேடு: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 18, 2022

Comments:0

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு முறைகேடு: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட வழக்கை ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கூடாது என்று தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. கடந்த 2020-21ம் கல்வியாண்டுக்கு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 113 காலி இடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன் தான் இந்த முறைகேட்டுக்கு காரணம் என்று அறிக்கை தாக்கல் செய்தது. இதனை எதிர்த்து செல்வராஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்வராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்ட இரண்டு கலந்தாய்வுகளில் இடங்கள் நிரப்பாததால், தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எனவும் இந்த முடிவு தனிப்பட்ட முறையில் செல்வராஜன் எடுக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.

அச்சமயம் குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்திய தேர்வுக் குழு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும் தீவிரமான இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews