ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை: யுஜிசி உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 23, 2022

Comments:0

ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை: யுஜிசி உத்தரவு

ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை: யுஜிசி உத்தரவு

நாடு முழுவதும் 45 ஒன்றிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 14 பல்கலைக்கழகங்கள் தவிர பிற பல்கலைக்கழங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மாநில கல்வி வாரியங்கள் நடத்தும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு (சியுஇடி) மூலம் மட்டுமே ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இளநிலைப் படிப்பில் சேர்வதற்கான கட்டாய பொது நுழைவுத் தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நுழைவுத் தேர்வை இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, பஞ்சாபி, அசாமி, ஒடியா உள்ளிட்ட 13 மொழிகளில் தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து ஒன்றிய பல்கலைக்கழகங்களும் இந்தக் கல்வியாண்டு முதல், பொதுவான நுழைவுத் தேர்வின் மூலம் மட்டுமே மாணவர்களைச் சேர்க்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்றரை மணிநேரம் நடைபெறவுள்ள இந்த தேர்வில் உள்ள அனைத்து கேள்விகளும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கப்பட்டிருக்கும். எனவே மாணவர்கள் என்சிஇஆர்டி பாட நூல்களில் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.தேர்வு எழுதுபவர்களுக்கு 27 பாடங்கள் அளிக்கப்படும். அதில் ஆறு பாடங்களைத் தேர்வுசெய்து பதிலளிக்க வேண்டும். மூன்றாவது பிரிவில் பொது அறிவுக் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இந்த பொது நுழைவுத் தேர்வு முன்பே இருப்பதுதான். ஆனால், இதுவரை 14 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இதனை பின்பற்றி வந்தன. புதிய கல்விக் கொள்கையின் கீழ் எல்லா மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இடஒதுக்கீடு பாதிக்காதுபொது நுழைவுத்தேர்வால் இடஒதுக்கீடு கொள்கையில் எந்த பாதிப்பும் வராது. அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது. ஆனால், பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு நீட் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதை போல ஒன்றிய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews