ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு: நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 09, 2021

Comments:0

ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு: நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

கடந்த ஆண்டு ஜனவரியில், தமிழ்நாடு மேல்நிலை கல்வி பணி விதிகளில், சிறப்பு விதி சேர்க்கப்பட்டது. அதன்படி, ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு குறித்த விளம்பரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம், செப்., 9ல் வெளியிட்டது. அந்த அறிவிப்பில், வயது வரம்பு நிர்ணயம் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனால், வயது வரம்பு நிர்ணயம் தொடர்பான விதியை எதிர்த்தும், ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் வெளியிட்ட வயது நிர்ணயம் தொடர்பான பிரிவை எதிர்த்தும், 18 பேர் தாக்கல் செய்த மனு:நாங்கள் முதுகலை பட்டம் மற்றும் பி.எட்., முடித்துள்ளோம். ஆசிரியர்கள் 2012 வரை வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஒவ்வொரு தேர்விலும் வயது வரம்பு 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. சிறப்பு விதிகள் 2020 ஜனவரியில் ஏற்படுத்தப்பட்டு, பொதுப் பிரிவினருக்கு 40; இடஒதுக்கீடு பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த மாதம் முதுநிலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், 45 வயதை கடந்த நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, வயது வரம்பு நிர்ணயித்ததை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன்; அரசு சார்பில், அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகினர்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கொள்கை முடிவு எடுப்பது, அரசின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது; குறிப்பிட்ட முறையில் கொள்கை முடிவு எடுக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட முடியாது.ஆசிரியர் பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட வயது வரம்பை அரசு நிர்ணயித்துள்ளது. அதை தன்னிச்சையானது என்று கூற முடியாது.எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews