நவம்பர் 5ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أكتوبر 31، 2021

Comments:0

நவம்பர் 5ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வழக்கமான தடுப்பூசிகளை வழங்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நவம்பர் 5ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை: தற்போதைய சூழலில், மாநிலத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேசிய அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பிசிஜி (காசநோய்), ஹெபிடைடிஸ் பி (கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய்), ஓபிவி (இளம் பிள்ளை வாதம்), ஐபிவி (இளம் பிள்ளை வாதம்), பென்டா (கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ப்ளூயன்ஸ் தொற்று, கல்லீரல் தொற்று, ரோட்டா (வயிற்றுப்போக்கு), எம்.ஆர். தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதனுடன் தமிழக அரசின் முயற்சியால் நிமோனியாவுக்கான நியூமோகாக்கல் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இவை யாவும் வழக்கமாக ஆண்டுதோறும் மருத்துவமனைகள் மட்டுமல்லாது, சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகின. 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஏற்கெனவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது 1 முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன. அண்மைக் காலமாக நிலவி வரும் பெருந்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு வரும் நவம்பர் 5ம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் 5 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கு டிபிடி எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசியை வழங்க வேண்டும். 10 வயதான மாணவர்களுக்கு ரண ஜன்னி தடுப்பூசி வழங்க வேண்டும்.

இந்த நடவடிக்கையை டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்வது அவசியம். பள்ளியில் இடை நின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும். இவ்வாறு பொதுசுகாதாரத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة