Breaking

Saturday, August 21, 2021

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு: போராட்ட கால வழக்கை ரத்து செய்ய கோரிக்கை

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், செல்வம் தலைமையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று சந்தித்தனர். நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதற்கும், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கும் அமைப்பின் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்த உள்ள மாநில மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டு தலைமை தாங்கவும் அழைப்பு விடுத்தனர். மேலும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கொடுத்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

* திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததற்கு இணங்க, 1.4.2003க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அனைவருக்கும் தற்போதுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

* பள்ளி கல்வித்துறையின் ஆணையர் பணியிடத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பணியிடத்தை கொண்டு வர வேண்டும்.

* போராட்ட காலத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது தொடரப்பட்ட போலீஸ் வழக்குகள், நீதிமன்ற வழக்குகள், பணியிட மாற்ற உத்தரவுகள் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.

* மத்திய அரசு அறிவித்த 11 சதவீத அகவிலைப்படியை வழங்க உத்தரவிட வேண்டும்.

* கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலை நிறுத்த போராட்ட காலத்தை பணிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும். மேற்கண்ட முக்கிய கோரிக்கைள் உள்பட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog