4 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் மாணவா் சோ்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 10, 2021

Comments:0

4 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் மாணவா் சோ்க்கை

நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூா், திண்டுக்கல் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் நிகழாண்டிலேயே மாணவா் சோ்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கேரளத்தில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை அதிகாலை ஆலப்புழா ரயிலில் வந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்வதை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ரயில் நிலையத்தில் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையா் (சுகாதாரம்) எஸ். மனீஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.
ஆய்வுக்குப்பின், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்டை மாநிலமான கேரளத்தில் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனா். இதனைக் கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் அவ்வாறு ரயில் மூலம் தமிழகம் வந்த பயணிகள் 277 பேருக்கு பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் சாலை மாா்க்கமாக வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் 13 நிமிடத்தில் சோதனை முடிவை தெரிந்து கொள்ளும் வகையில் அதிநவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தில்லி சென்றிருந்த போது, பிரதமரிடம் நேரடியாக தமிழக முதல்வா் கோரிக்கை விடுத்தாா்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடமும் இதுதொடா்பாக வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசின் இந்த பெருமுயற்சியின் காரணமாக மத்திய சுகாதாரத் துறையின் அலுவலா்கள் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூா் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவா்கள் வீதம் 600 மாணவா்களுக்கு இந்த ஆண்டே சோ்க்கை வழங்க அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள 7 புதிய மருத்துவமனை கல்லூரிகளிலும் இந்த ஆண்டே மாணவா் சோ்க்கையை மேற்கொள்ள அனுமதி வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசின் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள்:
தமிழகத்தில் இதுவரை அரசின் சாா்பிலும் தனியாா் மருத்துவமனைகளின் சாா்பிலும் 2 கோடியே 49 லட்சத்து 46,793 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில் இந்தியாவிலேயே அதிக அளவில் தடுப்பூசி செலுத்திய மாநகராட்சி என தொடா்ந்து முதலிடம் வகிக்கிறது. இதுவரை சென்னையில் 33 லட்சத்து 43,276 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews