Breaking

Sunday, May 09, 2021

அரிசி, முட்டை, சத்துணவு பொருள் நிறுத்தம்! அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு

மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்த, அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட சத்துணவு பொருட்கள், கடந்த ஒரு வாரமாகவழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 50 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர். 2020 மார்ச்சில், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதை அடுத்து வாட்ஸ்ஆப் மற்றும் கல்வி &'டிவி&' வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. சத்துணவு சாப்பிடும் மாணவர் களுக்கு அதற்கான தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.கடந்த செப்டம்பருக்கு பிறகு, ரொக்கத்திற்கு பதில், அரிசி, பருப்பு, முட்டை வழங்கும் பணி துவங்கியது. இதன்படி, நாள் ஒன்றுக்கு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு 100 கிராம் அரிசி, 40 கிராம் பருப்பு என, நிர்ணயிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கான அரிசி, பருப்பு மற்றும் 10 முட்டைகள் வழங்கப் பட்டு வந்தன. இந்நிலையில் மே மாதம் துவங்கி, ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த மாதம் வழங்க வேண்டிய அரிசி, பருப்பு, முட்டை ஆகியவை இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், &'மாதம் ஒருமுறை பள்ளிக்கு சென்று சத்துணவு பொருட்களை வாங்கி வந்தோம். இந்த மாதம் தொடங்கி, ஒரு வாரம் ஆனபோதும், இதுவரை சத்துணவு பொருட்கள் வழங்கப்படவில்லை. கொரோனா காரணமாக வேலை இழந்து, வருமானம் குறைந்துள்ள சூழ்நிலையில், மாணவ, மாணவர்களுக்கு தர வேண்டிய சத்துணவு பொருட்களையும் அரசு நிறுத்தி வைத்தது வேதனை தருகிறது. உடனடியாக மாணவ, மாணவியருக்கு, சத்துணவு பொருட்கள் வழங்க வேண்டும்&' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog